என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரதி பூங்காவில் செடிகள் கருகி காட்சியளிக்கிறது
நகராட்சி பூங்காக்களில் வாடும் செடிகள்
ஊழியர்கள் போராட்டத்தால் நகராட்சி பூங்காக்களில் செடிகள் வாடும் நிலையில் உள்ளது.
புதுச்சேரி:-
புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அரசே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும்.
நிலுவையிலுள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் இறப்பு-பிறப்பு சான்றிதழ் வழங்கும் பணி, துப்புரவு பணி, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பராமரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகை, சட்டமன்றம் அருகில் உள்ள பாரதி பூங்கா 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. தினமும் இரு வேளையும் பூங்காவில் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். இதனால் பச்சைப்பசேல் என பூங்கா செழித்து காணப்படும். ஊழியர்களின் போராட்டத்தால் தண்ணீர் ஊற்றப்படவில்லை. புதுவையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது.
100 டிகிரிக்கும் மேல் கொளுத்தும் வெயிலால் மக்கள் மதியநேரங்களில் வீடுகளுக்கும் முடங்கிப் போயுள்ளனர். இந்த சூழலில் தண்ணீர் இல்லாமல் பாரதி பூங்கா உட்பட நகராட்சி பூங்காக்கள் அனைத்திலும் மரம், செடிகள், புல்தரைகள் காய்ந்து சருகாகி வருகின்றன.
பாரதி பூங்காவை சுற்றியுள்ள அம்பேத்கர் சிலை, வ.உ.சி. சிலை, அன்னை தெரேசா சிலை ஆகிய சதுக்கங்களும் பராமரிப் பின்றி களையிழந்துள்ளன. பாரதி பூங்காவில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் பெற்றோர்கள் அழைத்து வந்து உணவு கொடுப்பர்.
ஊழியர்களின் போராட்டத்தால் பாரதி பூங்கா பூட்டப்பட்டதால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story






