என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
மத்திய அரசு மழை நிவாரணம் நியாயமற்றது- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வேதனை
மத்திய அரசு மழை நிவாரணம் நியாயமற்றது என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி . பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பெய்த கனமழைக்கு மத்திய அரசு நிவாரணமாக ரூ.17.66 கோடி மட்டும் வழங்கியுள்ளது நியாயமற்றது. இது மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. புதுவையில் வரலாறு காணாத வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மாநில அரசு இதை மதீப்பீடு செய்து முதல்கட்டமாக ரூ.300 கோடி கோரியது. மதிப்பீட்டுக்குழு இதை கணக்கில் கொள்ளாமல் வெறும் 5.9 சதவீத தொகையை அளித்துள்ளது.
பேரிடர் நிவாரணத்தைத் தீர்மானிக்க மத்திய அரசு பின்பற்றும் அணுகுமுறை தவறாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட அவலம் நிகழ்கிறது. புதுவை மாநில மக்களின் துயர் துடைக்க முதல்-அமைச்சர் ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் என 3 லட்சத்து 27 ஆயிரம் கார்டுகளுக்கு ரூ.156.40 கோடி நிவாரணம் கொடுத்துள்ளார். சேத மடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.186 கோடி ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட மாக ரூ.90 கோடி சாலை பணிகள் தொடங்கியுள்ளன.
இது தவிர, 223 சிறு பாலங்கள், 38 வாய்க்கால்கள் கடும் சேதமடைந்துள்ளன. செல்லிப்பட்டு அணையை சரி செய்ய ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பயிர்களின் சேத மதிப்பு ரூ.14 கோடி. கால்நடை, வீடு சேதம் ரூ.2 கோடி. ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலத்துக்கு ரூ.500 கோடி இழப்பீடு தேவைப்படும்.
புதுவை அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என சிலர் கூறுகின்றனர். இது உண்மையில்லை என்பதையே இந்த நிவாரணம் தெளிவுபடுத்துகிறது. மத்திய அரசு, பிரதமருக்கு புதுவை மீது பரிவும், பாசமும் இருந்தால், கவர்னர் மத்திய அரசிடம் பேசி முதல்கட்ட நிவாரண தொகையில் விடுபட்ட ரூ.282.34 கோடியை பெற்றுத்தர வேண்டும். இதுதான் புதுவைக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






