என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பல்கலைக்கழக துணைவேந்தரை அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
சர்வாதிகாரப் போக்கோடு செயல்படும் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும் என இந்திய கம்யூ. வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திறக்கப்பட்ட கல்லூரிகளுக்கு 80 சதவீதம் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து உள்ளது. இந்த நிலையில் புதுவை மத்திய பல்கலைகழகம் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு ஆன்லைன் இல்லாமல் நேரடி தேர்வுகளை எழுத உத்தரவிட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளில் பருவ முறை தேர்வை ஆன்லைனில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. புதுவை சட்டக்கல்லூரியும் ஆன்லைனில் தேர்வு நடத்துகிறது. உத்தரவு பிறப்பிக்கும் மத்திய பல்கலைக்கழகம் கூட ஆன்லைனில் தேர்வுகள் நடத்துகிறது. இந்த நிலையில் இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மத்திய பல்கலைக் கழகம் ஏன் ஓரவஞ்சனை செய்கிறது?-
இதனால் புதுவையில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக் கான மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத ஒரு வார காலமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராடும் மாணவர்கள் கவர்னர், முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட்டார்கள். அவர்களும், மாணவர்களின் கோரிக்கைகள் நியாய மானது என்று சொல்லி மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்தார்கள்.
கல்வி அமைச்சர் நேரடியாகவே துணைவேந்தர் குர்மித் சிங்கை சந்தித்து முறையிட்டார். கவர்னர் தமிழிசை துணைவேந்தர் குர்சித் சிங்கிடம் பேசி நேரடி தேர்வை ரத்து செய்ய அறிவுறுத்தனார். ஆனால் துணைவேந்தர் முறையிட்ட மாணவர்களை மிரட்டி உள்ளார். மேலும் துணைவேந்தர் குர்மித் சிங் புதுவை அரசு, கவர்னரின் அறிவுறுத்தல்களை மதிக்காமல், ஆணவப்போக்கோடு செயல்படுகிறார்.
இதுவரை ஆன்லைன் தேர்வுக்கான உத்தரவு பிறப்பிக்கவில்லை. கவர்னர் உடனடியாக இந்த பிரச்சனைகளில் தலையிட்டு துணைவேந்தர் குர்மித் சிங்கை எச்சரிக்கை செய்து மாணவர்களின் நியாயமான கோரிக்கையான ஆன்லைனில் தேர்வு எழுதும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story






