என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்

    100 நாள் பணியாளர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
    அரியலூர்: 

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத்திட்டம்) பணி ஒதுக்கீடு செய்யும்போது ஒரு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அதிக நாட்கள் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 

    மற்றொரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு மிகக் குறைந்த நாட்களே பணி ஒதுக்கீடு செய்வதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரியலூர்-திட்டக்குடி சாலையில் வயலப்பாடி பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது இனி வரும் காலங்களில் பாரபட்சமின்றி பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அனைவருக்கும் விரைவாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதே போல், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலைக்கு காலை 7 மணிக்கு பணியாளர்கள் வந்து கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வீட்டு வேலைகளால் காலை 7 மணிக்கு வேலைக்கு வர சாத்தியமில்லை எனவே வேலை நேரத்தை  9 மணி என மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்து வந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி 8.30 மணிக்கு வருகைதர கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்ட பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×