என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
உள்ளாட்சி அமைப்பை உருவாக்க தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
சமூக நீதியுடன் கூடிய உள்ளாட்சி அமைப்பை உருவாக்க தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செய்லாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநில தேர்தல் ஆணையர், தான் செய்த தவறுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார். கடந்த 2009-ம் ஆண்டு புதுவை அரசால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பதவிகளுக்கான அட்டவணை இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பதவிகள் ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இப்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ்-பாரதீய ஜனதா கூட்டணி அரசு 6.10.2021 அன்று பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்தது. இதை ஏற்றுதான் மாநில தேர்தல் ஆணையம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
எனவே புதுவை அரசும், மாநில தேர்தல் ஆணையமும் சமூக நீதியை பறித்தது உண்மைதானே. இந்த உண்மையை உலகிற்கு உரத்து சொன்னோம்.
கடந்த 2-ந்தேதி மாநில தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுடன்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள்.
ஆனால் மாநில தேர்தல் ஆணையர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்து பதிவை ஏன் தணிக்கை செய்கிறார்? மேலும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையுமில்லை என்று சொத்தையான வாதத்தை முன்வைக்கிறார்.
அப்படியானால், சமூக நீதியுடன் கூடிய உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அரசால் அமைக்கப்பட்டு பணியாற்றுகிற நீதிபதி கே.கே. சசிதரன் ஒரு நபர் ஆணையத்தின் மீதான மதிப்பீடு என்ன?
மாநில தேர்தல் ஆணையர் மாநிலத்தில் உள்ள சமுக கட்டமைப்பை புரிந்து கொண்டு, சமூக நீதியுடன் கூடிய மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கும் பார்வையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story






