என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
பணி உயர்வு வழங்கக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
பணி உயர்வு வழங்கக்கோரி கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் உயர்கல்வி இயக்குனரகத்தின் கீழ் புதுவை உயர்கல்வி குழுமம் அரசின் முழு நிதியுதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த குழுமத்தின் மூலம் புதுவையில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளும், காரைக்காலில் ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக எந்த பணி உயர்வும் வழங்கவில்லை. மாத சம்பளமும் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உள்பட இதர படிகள் அரசு ஊழியர்களுக்கு இணையாக கடந்த 6 ஆண்டாக வழங்கவில்லை. பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் நிதித்துறை செயலர், அதிகாரிகளை கண்டித்தும், சம்பளம், பணி உயர்வு, 7-வது சம்பளக்குழு நிலுவைத்தொகை உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவர்களின் வகுப்புகள், தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அனைத்து கல்லூரிகளிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர். வருகிற 19-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணியவும் திட்டமிட்டு உள்ளனர். 16-ந்தேதி 5 கல்லூரிகளின் முன்பு வாயிற்கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ், கோரிக்கை அட்டை அணிந்து வகுப்புகளை நடத்தவும், 24-ந்தேதி உயர் கல்வி குழும தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், 25-ந்தேதி மாலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் சங்க தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story






