என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை தேர்தல் பொது பார்வையாளர் எஸ்.வளர்மதி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினர்.
    X
    2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை தேர்தல் பொது பார்வையாளர் எஸ்.வளர்மதி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினர்.

    2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை அதிகாரி ஆய்வு

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை எல்.எப்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

    மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, சோளிங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரக்கோணம் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தேர்தல் பொது பார்வையாளர் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை எவ்வித பிரச்சினைகள் ஏற்படாமலும், சலசலப்புக்கு இடமளிக்காத வகையிலும் இப்பயிற்சி வகுப்பில் அனைத்து தகவல்களையும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். 

    வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று மாதிரி வாக்குப்பதிவை மேற்கொண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் இயங்குகின்றனவா? என உறுதி செய்ய வேண்டும்.

    வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் படிவங்களை எவ்வித தவறும் ஏற்படாத வண்ணம் பூர்த்தி செய்வதை தெரிந்து கொள்ள வேண்டும். 

    வாக்களிக்க தெரியாத நபர்கள் எவரேனும் வாக்களிக்க உதவி செய்யுமாறு கேட்கும்போது, அவர்களை வெளியில் ஒட்டப்பட்டுள்ள வாக்களிப்பது எப்படி என்பதற்கான படிவத்தினை பார்த்து தெரிந்து கொள்ளும்படி தெரிவிக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட பட்டனை அழுத்துங்கள் என தெரிவிக்க கூடாது.

    வாக்குப்பதிவின் போது அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் அருகில் சென்று ஏதேனும் பிரச்சனையை சரிசெய்யும் போது அங்குள்ள ஏஜெண்டை அருகில் வைத்துக்கொண்டு அப்பணியைச் செய்ய வேண்டும். 

    செல்போனில் வாக்குப்பதிவை பதிவு செய்வதையும் செல்பி புகைப்படம் எடுப்பதையும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு எந்திரங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி செய்திடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதை வாக்குச்சாவடி அலுவலர் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 
    வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு எந்திரத்தில் பூஜ்ஜியம் காட்டுகிறதா என்பதை பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் காண்பிக்க வேண்டும்.

    வாக்குப்பதிவின் போது மாலை 5 மணிக்கு பிறகு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு வரிசையின் கடைசி நபரிடமிருந்து டோக்கன் வழங்கிட வேண்டும். 

    கொரோனா பாதித்த வாக்காளர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விதி முறைகளை கடைப்பிடித்து அவர்கள் வாக்களிப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

    எந்த ஒரு நபருக்கோ அல்லது கட்சிக்கு சாதகமாக செயல்படுவது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் நடுநிலையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×