என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பாலம் கட்டும் பணியை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் தொட
    X
    புதிய பாலம் கட்டும் பணியை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் தொட

    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடியில் புதிய மேம்பாலம்

    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடியில் 4 வழி பாதையுடன் மேம்பாலத்தை கவர்னர், முதல்-அமைச்சர் பணிகளை தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி: 

    புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியப்பாளையத்தில் சங்கராபரணி ஆற்றை கடக்க மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால் சிதில மடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது ஆற்று வெள்ளம் மேம்பாலத்தை தாண்டி ஓடியது. இதனால் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    மேம்பாலம் குறுகியதாக இருப்பதாலும், போக்கு வரத்து நெரிசல் அதிகரித் துள்ளதாலும் புதிய பாலம் அமைக்க அரசு முடிவு செய்தது. அதோடு தேசிய நெடுஞ்சாலையில் எம்.என்.குப்பம் முதல் இந்திராகாந்தி சிலை வரை சாலையை அகலப்படுத்தவும், பலப்படுத்தவும் திட்டமிடப் பட்டது. 

    கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ரூ.92 கோடியே 74 லட்சத்தில் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது. இத் திட்டத்தின் கீழ் 11.240 கி.மீ. சாலை அகலப்படுத்தப்பட உள்ளது.  சங்கராபரணி ஆற்றின் மீது 365 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. 

    புதிய மேம்பாலத்தின் இருபுறமும் 470 மீட்டர் அணுகு சாலையும் அமைக்கப்படுகிறது. எம்.என்.குப்பம் துதல், மூலக்குளம் வரை சாலையின் மத்தியில் மெல்லிய தடுப்புச்சுவரும் அமைக்கப்பட உள்ளது. நகர்ப்புறத்தில் சாலை யின் இருபுறமும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கப்படுகிறது. 

    மேலும் வடிகால் வசதிக்காக தேவைப்படும் இடங்களில் 12 குறு பாலங்கள், நிழற்குடை, போக்குவரத்து அறிவிப்பு பலகை, சாலை வர்ணம் பூசும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலை பணி, குறு பாலம், வாய்க்கால் ஆகியவற்றுக்கு ரூ.44 கோடியே 31 லட்சமும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.27 கோடியே 85 லட்சம் என மொத்தம் ரூ.70 கோடியே 18 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. 

    ஒப்பந்த அடிப்படையில் குறைந்தபட்ச தொகையாக ரூ.59 கோடியே 43 லட்சம் கோரிய தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரருக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை விழா 11--ந்தேதி நடந்தது.

    விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:- 

    புதுவை மாநிலம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
    புதுவை மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். நானும் எந்தவிதத்தில் உதவி செய்ய வேண்டுமோ? அதை செய்கிறேன். மக்களின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக உள்ளது. 

    முதல்-அமைச்சர் தன் பொறுப்போடு செயல்படுகிறார். அவருக்கு ஒரு சகோதரியாக என் பணிகளை மேற்கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள உரிமை எவ்விதத்திலும் மறுக்கப்படாது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் நோக்கமும் புதுவையை மேம்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் உள்ளது. இன்னும் பல திட்டங்கள் புதுவைக்கு வர உள்ளது. 

    மத்திய  மந்திரிகள் மிகுந்த உறுதுணையாக உள்ளார்கள். சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி புதுவை  வளர்ச்சி பெற வேண்டும் என விரும்புகிறார். தெலுங்கானாவுக்கு வந்த பிரதமர் மோடியும் புதுவை மக்களின் மீது மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். மக்கள் நலனில்தான் அனைவரின் அக்கறையும் உள்ளது. 

    புதுவை மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற உள்ளது. இன்னும் பல திட்டங்கள் புதுவைக்கு வர உள்ளது. அமைதியாக புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்படுகிறது. அத்தனை திட்டங்களுக்கும் மத்திய அரசிடம் உதவி பெற்று வருகிறோம். அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    இது மிகவும் அவசியமான பாலம். முன்பு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. இப்போது   விழுப்புரம் செல்லும் மிக முக்கியமான சாலையாக உள்ளது. இங்கு பெரிய பாலம் தேவை. மத்திய அரசை அணுகிய போது 4 வழி சாலையாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர். இந்த கட்டு மானப்பணியை விரைவில் தொடங்கி 2 ஆண்டில் ஒப்பந்ததாரர் முடிக்க வேண்டும். 

    இந்த பாலம் தரமானதாக இருக்க வேண்டும். புதுவையில் அனைத்து சாலைகளையும் மேம்படுத்தும் பணி விரைவில் நடைபெறும். கோர்க்காடு, ஏம்பலம் சாலை மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. புதுவை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்கு மத்திய அரசின் நிதியுதவி கேட்டுள்ளோம். மத்திய அரசும் தேவையான நிதியை ஒதுக்கி தந்து வருகிறது. புதுவைக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தர கவர்னர் பெரும் உறுதுணையாக இருந்து வருகிறார். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்கட்சித்தலைவர் சிவா, சிவசங்கரன், எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×