என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருபுவனை ஏரிக்கரையில் உள்ள பனை மரங்கள்.
பனை மரங்களை பாதுகாக்க கோரிக்கை
முன்னோர்கள் விட்டுச்சென்ற பணம் தரும் பனை மரங்களை பாதுகாக்க கோரிக்கை எம்.ஜி.ஆர். பொதுநல சமூக பேரவை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பொது நல சமூக பேரவை செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம்& நாகப்பட்டினம் 4 வழிச்சாலைக்காக திருபுவனை ஏரியில் உள்ள பனை மரங்களை வெட்டி அழிக்க முன்வருகிறார்கள். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி இயற்கை அரணை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அனைவரும் பாதிக் கப்பட்டுள்ளோம்.
இப்படிப்பட்ட நிலையில் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தான பனை மரங்களை சாலை விரிவாக்கம் என்ற போர்வையில் அழிக்க நினைப்பது மாபெரும் தவறாகும்.
பனை மரங்கள் உள்ள இடங்களை விட்டு விட்டு வேறு வழிப்பாதையை அமைக்கலாம்.
இன்று ஒரு பனை மரம் வளர வேண்டும் என்றால் பல வருடங்கள் ஆகும். அதன் வளர்ச்சியினை பார்ப்பது இந்த தலைமுறையினரால் முடியாத காரியம். பல 100 கோடி செலவு செய்தாலும் இத்தகைய பசுமை நிறைந்த வரிசையாக அரணாக பனை மரங்களை உருவாக்க முடியாது. இது மிக, மிக அரிய செயலாகும்.
தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. அதே போல் புதுவையிலும் இந்த அரிய பனை மரங்களை வெட்ட தடை விதித்து அதனை தக்க முறையில் பாதுகாக்க வேண்டும்.
மாநிலத்தில் 33 சதவீதம் வனப்பகுதி அமைய வேண்டும். ஆனால் புதுவையில் அது போன்று ஏதும் இல்லை. மேலும் கொஞ்சமாக உள்ள இயற்கை வள சொத்தான பனை மரங்களை நாம் மீட்டு எடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் பனை மரங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்தன. இன்று குறைவதினால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர், மண் வளம், தூய காற்று பாதிக்கப்படக்கூடிய அபாய கரமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நெல்லூரில் தங்க கடற்கரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது இருந்த பனை மரங்களை வெட்டி சாய்க்காமல் சாலையின் நடுவே வருகின்ற மாதிரி அமைத்து அதனை இன்றும் நடைமுறையில் கடைபிடித்து வருகின்றனர்.
அதேபோல் நம் மாநி லத்திலும் பனை மரங்களை வெட்டாமல் தடுத்து அதனை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






