என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஆன்லைனில் வேலை தருவதாக கூறும் மோசடியில் பெண்கள் சிக்கக்கூடாது கிரைம் போலீசார் எச்சரிக்கை

    ஆன்லைனில் வேலை தருவதாக கூறும் மோசடியில் பெண்கள் சிக்கக்கூடாது என்று கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
    திருச்சி:

    வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சிக்கேற்ப குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை   ஏற்படுத்தியுள்ளது. ஆள் பாதி, ஆண்டிராய்டு போன் பாதி என்ற அளவுக்கு கைப்பேசியின் பயன்பாடு காணப்படுகிறது. இதுவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் வசப்படுத்தி பல்வேறு குற்றசம்பவங்களுக்கு ஆளாக்கி விடுகிறது.

    அந்த வகையில்தான் திருச்சி  மாவட்டத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் ஆன்லைன்  மோசடி புகார்களால்  தொடர்ந்து மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவ&மாணவிகள், தொழிலதிபர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த புகார்களை தடுப்பதற்காகவும்,  குறைப்பதற்காக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

    குறிப்பாக செல்போனில் அதிகமாக செயலிகளை அதன்பின் விளைவுகளைபற்றி தெரியாமல் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் தங்களின் பயன்பாட்டிற்காக வைத்துள்ளனர். அதிலும் தனக்கு ஆபத்து வரும் என்று தெரியாமலேயே    தங்கள் செல்போனில் வைத்து கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள். 

    சாதரணமாக தங்களுக்கு தெரியாத செயலிக்குள் பொது மக்கள் செல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சினைகள் வராமல்  தடுக்கலாம். ஏனென்றால் செல்போன் எண்ணிற்கு மர்ம நபர்கள் லிங்க்  என்னும்  ஆன்லைன் செயலியை அனுப்பி வைப் பார்கள். அதனை செல்போன் உபயோகிப்பாளர்கள் தொட்டதும் தங்களின் விபரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள்  தங்களுக்கு தெரியாமலேயே பயன்படுத்தி கொண்டிருப்பார்கள்.

    அதிகமான மோசடிகள் வங்கிகளின் பெயர்களை வைத்து நடப்பதாக அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர். மேலும்  இதுகுறித்து  திருச்சி மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கூறி யதாவது:

    பொதுமக்கள் தங்களின் பேராசையை  முதலில் கட்டுப்படுத்த வேண்டும். உங்களின் பேராசையைதான் மர்ம நபர்கள் பணமாக மாற்றி  உங்களை  எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள். இயல்பாக பொது மக்களின் செல்போன் எண்ணிற்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் அழைத்து உங்களுக்கு கார் பரிசாக லாட்டரியில் விழுந்துள்ளது.   

    அதனை நீங்கள்  பெற்றுகொள்ள உடனடியாக குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என் கிறார்கள். உடனடியாக பொதுமக்களும்  ஆசைப்பட்டு தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராமல் செலுத்துகிறார்கள். மர்ம  நபர்கள் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள்.    

    குறிப்பாக மாதத்திற்கு 10 முதல் 15 வழக்குகள் வரையில் தற்போது சைபர் கிரைம் போலீசாருக்கு வந்து கொண்டே இருக்கிறது.  மேலும்  ஆண்களுக்கு ஏதாவது ஒரு செல்போன் எண்ணில்  இருந்து வீடியோ கால் மூலம் அழைக்கிறார்கள். அழைப்பை எடுத்ததும் பெண்ணின் அரை நிர்வாண படத்தை காட்டுகிறார்கள். 

    பின்னர் மறைத்து வைத்திருக்கும் காமிரா மூலம் அழைப்பை எடுத்து பேசுபவரையும் பதிவு செய்து மிரட்டுகிறார்கள். முக்கியமாக தற்போது ஆன்லைனில்  வேலை தருகிறோம், வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம், நல்ல வருவாய் என்று விளம்பரம் செய்து பெண்களை வலையில்  வீழ்த்தி வருகிறார்கள். 

    ஆகவே பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். இது போன்ற பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்து செல்லும்    வகையிலும் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையிலும்  இன்னும்  1 வாரத்திற்குள் புதிய முயற்சியாக வித்தியாசமான முறை யில் சைபர் கிரைம் போலீசார் சார்பில்  பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படும் என்றார்.
    Next Story
    ×