என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்ட வேண்டும்- புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

    பிரச்சினைகளை பேசி தீர்க்க தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கட்சி தலைமையிடம் புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சபாநாயகர், 2 அமைச்சர், பாராளுமன்ற செயலர் பதவிகளில் பா.ஜ.க.வினர் இடம்பெற்றுள்ளனர். 

    சட்டமன்ற பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என தேர்தல் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது. கூட்டணியில் இடம் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்த அ.தி.மு.க.வும் தங்களுக்கு வாரிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆட்சி அமைந்து 8 மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை ஆளும் கட்சி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கப்படவில்லை.

    பா.ஜ.க.வினர் ரங்கசாமியை நேரில் சந்தித்து இதுகுறித்து  கேட்டனர். அப்போது வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தலைவர் பதவி அளிக்க முடியாது என ரங்கசாமி மறுத்து விட்டார்.  இது ஆளும்கட்சி, ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டு மின்றி கட்சியில் சீட் கிடைக்காதவர்கள், நீண்டகாலமாக கட்சிக்கு உழைத்தவர்கள், தேர்தலில் வெற்றிக்காக உழைத்தவர்களும் வாரிய தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். அவர்களும் ரங்க சாமியின் பதிலால் ஏமாற்ற மடைந்துள்ளனர். 

    இதனிடையே உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீட்டுக்காக 2 முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது. பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்றார். அப்போது தேர்தல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், பிரச்சினைகளை பேசி தீர்க்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடத்தப்படவில்லை. 

    இந்த நிலையில் வாரிய தலைவர் பதவியை வழங்க முடியாது என ரங்கசாமி கைவிரித்துவிட்ட நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதா கட்சி தலைமையை தொடர்பு கொண்டனர்.  புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் பேசியுள்ளனர். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை நடத்த முதல்-அமைச்சர் ரங்கசாமியை பா.ஜனதா மேலிடம் வலியுறுத்த வேண்டும்.  அப்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளனர். அவரும், இதற்கான ஏற் பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். 

    இதனிடையே ஆட்சி அமைந்த பிறகு ரங்கசாமி இதுவரை டெல்லி செல்லவில்லை. புதுவை மாநிலத்தோடு தேர்தல் நடந்த தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் டெல்லியில் பிரதமரை பலமுறை சந்தித்துள்ளனர். 

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ரங்கசாமி டெல்லி செல்வதை தள்ளிப்போட்டு வந்தார். 8 மாதம் கடந்துவிட்ட நிலையில் அவர் டெல்லி செல்லாததும் புதுவை பா.ஜனதாவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×