என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை அருகே விஷபூச்சி கடித்ததில் நர்சிங் கல்லூரி பேராசிரியை பலி
புதுச்சேரி:
புதுவை அருகே சிலுக்காரிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ்.
இவர் ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரசன்யா. (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரசன்யா கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2-ந்தேதி காலை வழக்கம் போல் பிரசன்யா கல்லூரிக்கு பணிக்கு சென்றார்.
அதே போல் ஜெகதீஷ் மதியம் 2-வது ஷிப்ட் வேலைக்காக புறப்பட்டு சென்றார். மாலை பணி முடிந்து பிரசன்யா வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு வேலை சம்பந்தமாக சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற பிரசன்யாவை விஷபூச்சி ஒன்று கடித்து விட்டதாக கூறப்படுகிறது.
உடனே மயங்கி சாய்ந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரசன்யா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரசன்யா நேற்று மதியம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது கணவர் ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






