என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஜிப்மர் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் ஜிப்மர் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு ஜிப்மர் ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் வினோத்குமார் (வயது28). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. பிருந்தா என்ற மனைவி உள்ளார்.
கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக் கிடையே அடிக்கடி சிறுசிறு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு வினோத் குமார் பணி முடிந்து தாமதமாக வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மனைவி பிருந்தா கேட்ட போது நண்பர் விபத்தில் சிக்கி கொண்டதால் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு வீட்டுக்கு வர தாமதமானதாக வினோத்குமார் கூறினார்.
ஆனால் இதில் பிருந்தா சமாதானம் அடையவில்லை. இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வினோத்குமாரிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி பிருந்தா பரசுரெட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி கோபித்து சென்றதால் வினோத்குமார் மனவேதனையில் இருந்து வந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வினோத்குமார் மின்விசிறியில் துண்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் பட்டுரோஜா கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






