search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவை அரசு பொறுப்பற்று செயல்படுகிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

    புதுவை அரசு பொறுப்பற்று செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
    புதுச்சேரி:

    இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம், தாராள நிதி தருவோம் என வாக்குறுதி அளித்தனர். இதை நம்பி மக்கள் ஓட்டளித்ததால் வெற்றியும் பெற்றனர். 

    ஆட்சி அமைந்து 7 மாதமாகியும் எந்த நிதியும் வரவில்லை. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. பொதுத்துறையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கப் படவில்லை. ரேசன்கடைகள் இயங்கவில்லை. 

    பொங்கல் பொருட்கள் பண்டிகை முடிந்தும் தரவில்லை. கடந்த நாராயணசாமி ஆட்சியில் கவர்னர் மூலமாக அரசை முடக்கம் செய்யும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டது. தற்போதும் அதேநிலைதான் தொடர்கிறது. 

    கொரோனா 3&வது அலையை தடுக்க தமிழகம் உட்பட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம், விழாக்களுக்கு தடை விதித்தனர். 

    ஆனால் புதுவையில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அனுமதித்தனர். இதன் பயனாக நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களைப்பற்றி கவலைப் படாத, பொறுப்பற்ற அரசாக புதுவை அரசு  செயல்படுகிறது. இதனால்  மக்கள்தான் அவதிப்படு கின்றனர். 

    தேர்தலில் ரங்கசாமி அனைத்து வாக்குறுதி களையும் அளித்தார். தற்போது பொறுப்பில்லாத வகையில் தான் ராஜா இல்லை என கூறுகிறார். அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். 

    கவர்னராக தமிழிசை பொறுப்பேற்று 10 மாதமாகி விட்டது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் கவர்னர்களை பா.ஜனதா ஒற்றர்களாக பயன்படுத் துகிறது. ஜனாதிபதி, கவர்னர், சபாநாயகர் ஆகியோர் அரசியல்பாகுபாடு இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா ஆட்சியில் இவை தூக்கியெறியப்பட்டு கவர்னர்கள் பாகுபாடோடு செயல்படுகின்றனர். 

    பா.ஜனதா நடத்தும் விழாக்களில் கவர்னர் பங்கேற்கிறார். தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக கவர்னர் செயல்படுகிறார். இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    பேட்டியின்போது புதுவை மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×