என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதிய உச்சம் தொட்ட கொரோனா: புதுவையில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று - 3 பேர் பலி
புதுவையில் கொரோனா புதிய உச்சம் தொட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டுக்கு பிறகு கொரோனா தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக ஒரே நாளில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. 16-ந்தேதி 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்திருந்தனர். இந்த நிலையில் 17-ந்தேதி தொற்றால் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்துள்ளனர். புதுவையில் பரிசோதனை செய்யும் 3-ல் ஒருவருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
புதுவையில் 17-ந்தேதி 6 ஆயிரத்து 28 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 2 ஆயிரத்து 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பரிசோதனையில் 34.72 சதவீதமாகும்.
புதுவையில் ஆயிரத்து 715, காரைக்காலில் 279, ஏனாமில் 54, மாகியில் 45 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 114, காரைக்காலில் 27, ஏனாமில் 6, மாகியில் 16 பேர் என 163 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 194, காரைக்காலில் 37, ஏனாமில் 1, மாகியில் 24 பேர் என 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 8 ஆயிரத்து 983, காரைக்காலில் 994, ஏனாமில் 108, மாகியில் 145 பேர் என 10 ஆயிரத்து 230 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 10 ஆயிரத்து 393 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த 81 வயது முதியவர், சாந்தி நகரை சேர்ந்த 32 வயது பெண், காரைக்காலை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 3 ஆயிரத்து 355 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
கொரோனா தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Next Story






