search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

    திருக்கோவிலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் போலீசாருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றார் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். (வயது 35). இவர் செங்கல் அறுக்கும் தொழிலாளி. அவரது மனைவி பேபி. (33). இவர்களுக்கு சாரதி (14), சத்யா (11), ஆகிய மகள்களும், கார்த்தி(9) என்ற மகனும் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கணவன் மனைவி இருவரும் திருக்கோவிலூருக்கு வந்து பொங்கல் மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புது துணிகள் வாங்கி சென்றனர்.

    நேற்று இரவு வழக்கம்போல் மனைவி குழந்தைகளுடன் படுக்கைக்கு சென்ற லோகநாதன் திடீரென இரவு 11 மணி அளவில் தனது மனைவியை மட்டும் தனது வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

    அப்போது லோகநாதன் தன் மனைவியிடம் கடந்த 3 மாதங்களாக உனது நடத்தை சரியில்லை என திட்டி இருக்கிறார். இதனால் இருவருக்குமான வாய்த்தகராறு முற்றியது.

    ஆத்திரம் அடைந்த தொழிலாளி லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார். பின்னர் கோபம் கொப்பளிக்க மனைவியின் உடலை கத்தியால் கிழித்தார். இதில் பேபி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

    இதனை பார்த்த லோகநாதன் தான் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் வீட்டின் அருகிலுள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கவனித்து விட்ட லோகநாதனின் தாய் உடனே ஓடிவந்து சத்தம்போட்டு அக்கம்பக்கம் உள்ளவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். உடனே வீட்டில் தூங்கிய குழந்தைகளும் எழுந்து கதறி அழுதனர். .

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட லோகநாதனை காப்பாற்றினர்.

    அதன் பிறகுதான் அவரது மனைவி பேபியை கொலை செய்த விவரம் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலை தெரிந்து விரைந்துவந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட பேபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு போராடிய லோகநாதன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×