என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுவை ரேடியோ நிலையத்தை தபால் நிலையமாக மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்-சிந்தனையாளர்கள் பேரவை வலியுறுத்தல்
புதுவை ரேடியோ நிலையத்தை தபால் நிலையமாக மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என சிந்தனையாளர்கள் பேரவை வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் கலை, கலாச்சாரம், மொழி, இலக்கியம், பண்பாடு காக்கப்பட தகவல் மற்றும் செய்திகள் மக்களுக்கு சென்று சேர்ந்திட இந்திய அரசியல் சாசனப்படி, மத்திய அரசு அதிகாரத்தில் அகில இந்திய வானொலி மற்றும் அரசு தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலையங்கள் நாடெங்கும் இயங்கி வருகின்றன. இவை அந்தந்த வட்டாரத்தின் கிராமியக் கலைஞர்கள், சங்கீத வித்வான்கள் மற்றும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் பணியை கடந்த 80 ஆண்டுகளாக செய்து வருகின்றன.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்தப்பணி மத்திய அரசின் கடமை அல்ல எனக்கூறி பல காலக்கட்டங்களில் இதன் நிதி ஆதாரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. தற்போது இதன் தலைமை நிறுவனமான பிரசார்பாரதி ஆணைப்படி வருகிற 14-ந்தேதி தமிழர் திருநாளன்று (பொங்கல்) தொடங்கி இனி புதுவை உள்பட தமிழ்நாட்டின் இதர வானொலி நிலையங்களின் முதன்மை அலைவரிசைகள் சென்னை நிலையத்தின் அஞ்சல் நிலையங்களாக புது அவதாரம் எடுக்க உள்ளன.
இதனால் வட்டார படைப்பாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், நேயர்கள் பெருமளவில் பாதிப்படைவர். எனவே, புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள், இதர அமைப்புகள், 65 ஆண்டுகால புதுவை வானொலி நிலையத்தை பாதுகாக்கவும் இதர தமிழ்நாட்டு நிலையங்கள் தமது அடையாளங்களை இழக்காமல் காக்கப்படவும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






