என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    நிலத்துக்கு இழப்பீடு வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தொடர் காத்திருப்புப் போராட்டம்

    மயிலாடுதுறை அருகே 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, திருக்கடையூர் டி.மணல்மேட்டில் உள்ள நான்கு வழிச்சாலை பணி ஒப்பந்த நிறுவன அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய இழப்பீட்டை இதுவரை வழங்காமல் சாலை அமையவுள்ள பகுதியில் உள்ள விளைநிலங்களை அழித்து, ஏழை மக்களின் குடிசைகளை அகற்றும் நடவடிக்கைகளில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஈடுபட்டு வரும் நிலையில் சீர்காழி அருகிலுள்ள சட்டநாதபுரத்திலிருந்து காட்டுச்சேரி அருகேயுள்ள தேவானூர் பகுதி வரை (30 கிலோமீட்டர் தொலைவு) மட்டும் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையினை ஒப்பந்த நிறுவனம் வழங்காமல் போலீசார், வருவாய்த்துறையினரின் துணையோடு பணி ஒப்பந்த நிறுவனம் மிரட்டி வருவதாகவும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வில்ஸ்பன் ஒப்பந்த பணி நிறுவன அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.சிம்சன் தலைமையில் நேற்று காலை துவங்கியது.

    சி.பி.எம். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், மார்க்ஸ், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், சி.பி.எம். மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட தலைவர் காபிரியேல் ஆகியோர் பேசினர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் ஆனந்தன் மற்றும் விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து அங்கேயே சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் ஹரிதரன், டி.எஸ்.பி. லாமேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வெள்ளக்குளம் பகுதியில் விவசாயிகளின் தோட்ட வேலிகளை உடைத்தெறிந்து, 15 மரங்களை வெட்டி வீழ்த்தினர். தகவலறிந்து வந்த போராட்டக்குழுவின் ஒரு பகுதியினர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எந்திரத்தை விரட்டியடித்து வேப்பஞ்சேரி- திருக்கடையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளை அடக்கு முறையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், போராட்டக் குழுவினரும் வன்மையாக கண்டித்ததோடு, நான்கு வழிச்சாலைக்காக நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறினர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    Next Story
    ×