என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று மனு அளிப்பதற்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில் இந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
எனவே இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு விரைந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்து தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் உதவி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, 3 சக்கர வண்டி, வங்கிக்கடன் மானியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி மாற்றுத்திறனாளிகள் 217 பேர் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மருத்துவ அலுவலர் ஜீவா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






