search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மதுராந்தகம் அருகே கிளியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி மரணம்

    மதுராந்தகம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள கிளி ஆற்றில் துணி துவைத்து குளிக்க சென்ற மூதாட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
    மதுராந்தகம்:

    தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிளியாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.

    இந்தநிலையில் கிளி ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து வள்ளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை வள்ளியம்மாள் பெரும்பாக்கத்தில் உள்ள கிளி ஆற்றில் துணி துவைத்து குளிக்க சென்றார். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். இதற்குள் வள்ளியம்மாள் தண்ணீரில் மூழ்கினார். சுமார் 100 மீட்டர் தூரத்தில் வள்ளியம்மாளை கிராம மக்கள் மீட்டனர்.

    அப்போது அவர் இறந்திருப்பது தெரிந்தது. இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பலியான வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×