search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் சாம் சாம்வின்சென்ட்
    X
    இன்ஸ்பெக்டர் சாம் சாம்வின்சென்ட்

    சென்னையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சாம்வின்சென்ட். சைதாப்பேட்டை சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரவணன்.

    இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காவல் ஆய்வாளர் குடியிருப்பிலும், இன்ஸ்பெக்டர் சரவணன் புழுதிவாக்கம் ஜெகலட்சுமி நகரிலும் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளிலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    லஞ்ச குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சாம்வின்சென்ட், சரவணன் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை காவல்துறையில் உள்ள விபசார தடுப்பு பிரிவில் பணிபுரிந்தனர். அப்போது இருவர் மீதும் விபசார புரோக்கர்கள் மற்றும் விபசார கும்பலிடம் லஞ்சமாக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக இருவர் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது 13(2), 13(1)(டி) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையிலேயே இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தியது அங்கு வசித்து வரும் மற்ற அதிகாரிகள் மத்தியிலும், அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    காவல்துறையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியிலும் இந்த சோதனை பரபரப்பான பேச்சாக மாறி இருந்தது.

    இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன் இருவரும் விபசார தடுப்பு பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு பணிபுரிந்தபோது விபசார கும்பலிடம் பணபலன்களை பெற்றுக்கொண்டு பயன் அடைந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    இந்த காலகட்டத்தில் அவர்கள் தவறாக முறைகேடான வழியில் யார், யாரிடம் பணம் பெற்றுள்ளார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இருவரும் லஞ்ச புகாரில் சிக்கிய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சாம்வின்சென்ட், சரவணன் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்தது. இன்று மாலையில் சோதனை முடிந்த பிறகு அதுதொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், இருவரும் விபசார புரோக்கர்களிடம் பலன் அடைந்ததாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார், யாரிடம் பணம் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை அவர்கள் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காலத்தில் புரோக்கர்களால் கொடுக்கப்பட்டுள்ளது? என்ற தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

    இன்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட வாய்ப்புள்ளது.


    Next Story
    ×