என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடம் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை - இன்று முக்கிய முடிவு

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில்,2 .50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.
    பல்லடம்:

    கோவையில் இன்று ஜவுளி உற்பத்தியாளர்களுடன் விசைத்தறியாளர்களுக்கு புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

    இதுகுறித்து திருப்பூர்,கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில்,2 .50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலி உயர்வு இல்லாதது, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தொடர்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    இந்தநிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கடந்த 2014ல் கடைசியாக கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் கூலிஉயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டணஉயர்வு என்று பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளனர். 

    இந்த நிலையில் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில் இதுவரை 8 முறை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், முழுமையாக கலந்து கொண்டு கடந்த 7 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருக்கும் நியாயமான கூலி உயர்வு வழங்கி இந்தத்தொழிலையும் தொழில் சார்ந்த பல லட்சம் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×