search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகவதிபாளையம் பிரிவு திடலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
    X
    பகவதிபாளையம் பிரிவு திடலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    காங்கயத்தில் பி.ஏ.பி., விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பு

    விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், பி.ஏ.பி.வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பி.ஏ.பி. நிர்வாகம் முறைகேடாக பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீர் பாசனம் என்று வைத்துக்கொண்டு வெள்ளகோவில் கிளைக்கு தேவையான தண்ணீரை பி.ஏ.பி. நிர்வாகம் கொடுப்பதில்லை எனவும் பாசன விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். 

    இந்த நிலையில் விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இந்த கோரிக்கை தொடர்பாக பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதம், கடையடைப்பு, சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். 

    இந்த நிலையில் இந்தப்பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்எஸ்.பி., சசாங் சாய், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, போலீஸ் அதிகாரிகள் தனராசு, கிருஷ்ணசாமி, குமரேசன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் 3 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

    இந்தநிலையில் நேற்று காங்கேயத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனர். இதற்காக பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். 

    இதைத் தொடர்ந்து நேற்று  போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். 

    மேலும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் திரண்டு வந்த 100 பெண்கள் உள்பட 430 பேரை காங்கேயம் - கரூர் சாலையில் உள்ள பகவதிபாளையம் பிரிவு அருகே போலீசார் கைது செய்தனர். 

    அவர்கள் அனைவரும் காங்கேயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள்  அறிவித்தனர். அதன்படி இன்று பகவதிபாளையம் பிரிவு திடலில் இன்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
    Next Story
    ×