என் மலர்
செய்திகள்

ஊராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் அதன் எதிரே மலை போல குவிந்துள்ள புதர்களை படத்தில் காணலாம்.
அரசூரில் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ஊராட்சி அலுவலகம் - விரைவில் திறக்க கோரிக்கை
கொள்ளிடம் அருகே அரசூரில் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ஊராட்சி அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூரில் புதிதாக ஊராட்சி அலுவலக கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அருகில் உள்ள சேவை மைய கட்டிடத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் எதிரே உள்ள பழமையான ஒரு அய்யனார் கோவில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் அதை அப்படியே மரம் செடி கொடிகள் மற்றும் புதர்கள் மூடியுள்ளன. இதில் விஷப் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் அருகிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. ஊராட்சி அலுவலக கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதால் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய கூட்டங்கள் மற்றும் ஊராட்சி சம்பந்தமான நிகழ்வுகள் சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தை விரைவில் திறந்து அதன் எதிரே மலை போல் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






