search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் தேங்கியுள்ள மழை நீர்
    X
    சாலையில் தேங்கியுள்ள மழை நீர்

    சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் பலத்த மழை காரணமாக கடை வீதிகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
    சென்னை:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த 4 நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மழை ஓய்ந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் நேற்று காலையில் இருந்து மழை விட்டு விட்டு பெய்யத்தொடங்கியது. நேற்று மாலை 6 மணி அளவில் சென்னையின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

    இரவு 9 மணிக்கு மேல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பலத்தமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை விடிய விடிய கன மழையாக பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

    பலத்த மழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினார்கள். காலை நேரத்தில் அலுவலகத்துக்கு சென்றவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

    கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்படும் முன்பே மாணவர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கு வந்துவிட்டனர். இதனால் அவர்கள் மழையில் நனைந்துகொண்டே வீடுகளுக்கு திரும்பினார்கள்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் பலத்த மழை காரணமாக கடை வீதிகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக பட்டாசு, துணிமணிகள் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

    சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உள்ள சாலை, வேப்பேரி ரித்தர்டன் சாலை, ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    விருகம்பாக்கம் காளி அம்மன் சாலை, குன்றத்தூர் பூந்தமல்லி சாலையில் உள்ள குமணஞ்சாவடி பகுதி, பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

    புது வண்ணாரப்பேட்டை இளைய தெரு, காமராஜர் சாலை, தண்டையார்பேட்டை கைலாசம் தெரு, வைத்தியநாதன் தெரு- எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, கத்திவாக்கம் நெடுஞ்சாலை மீனாம்பாள் மேம்பாலம், கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர், காரனேசன் நகர், மீனாம் பாள் நகர் மெயின்ரோடு, வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா, ராயபுரம் சூரிய நாராயணா சாலை-லோட்டஸ் ராமசாமி தெரு சந்திப்பு ஆகிய இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதி, அரும்பாக்கம் ரசாக் காடர்ன் தெரு, அண்ணாநகர் 6-வது மெயின்ரோடு, திருமங்கலம் பள்ளி சாலை, பெரும்பாக்கம் எழில் நகர், ஆவடி ரெயில் நிலைய பகுதிகள், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    சென்னை வில்லிவாக்கம் நேரு நகர், ராஜமங்கலம் ரெயில்வே சுரங்கப்பாதை, கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பட்டரவாக்கம் பால்பண்ணை சாலை, கருக்கு மேனாம்பேடு, அம்பத்தூர் அத்திப்பட்டு காலனி ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி காணப்பட்டது. செம்மஞ்சேரி எழில் நகர், ஜவஹர் நகர் பகுதியிலும் மழைவெள்ளம் தேங்கி நின்றது.
    Next Story
    ×