search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் கொள்ளை
    X
    பணம் கொள்ளை

    ஈரோட்டில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு

    ஈரோட்டில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு குறிகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43). இவருக்கு ஈரோட்டில் சொந்தமாக செல்போன் உதிரிபாக கடை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வெங்கடேஷ் கடைக்கும், அவருடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கும் சென்றுவிட்டனர். அவருடைய மனைவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். அதைத்தொடர்ந்து மாலையில் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டில் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சத்தையும் காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு போன வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சென்று வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    போலீசார் விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
    Next Story
    ×