search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருவதை காணலாம்
    X
    மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருவதை காணலாம்

    புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்

    புரசைவாக்கத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கியதையொட்டி இன்று புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.
    சென்னை:

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதையொட்டி புரசைவாக்கம் நெடுஞ்சாலை இன்று ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல் கட்டமாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. சென்னை விமானநிலையம்- விம்கோநகர், சென்ட்ரல்- விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன.

    45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 23 கி.மீ. தூரம் சுரங்க வழியாகவும் 22 கி.மீ. வழித்தடம் மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது.

    2-வது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாதவரம்-சிறுசேரி, மாதவரம்- சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம்- பூந்தமல்லி என 119 கி.மீ. தூரத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், திட்ட வடிவமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டதால், மதிப்பீடு, 69 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது. இத்திட்டத்தில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி நிறுவனம், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடன் உதவி மூலம் இத்திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    புரசைவாக்கத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கியதையொட்டி இன்று புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலக சிக்னலில் இருந்து அபிராமி தியேட்டர் வழியாக கெல்லீஸ் சாலை வரை ஒருவழிப்பாதையாக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் ஒரு பகுதி முழுவதும் மெட்ரோ நிறுவனம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் சென்று வருகின்றன. கெல்லீஸ் சாலை வழியாக புரசைவாக்கத்தை நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    கெல்லீஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் நாகப்பா சாலை, பெயின் ஸ்கூல் வழியாக புரசைவாக்கத்தை சென்றடையலாம்.

    புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். சிக்னல் அருகே 2-ம் கட்ட மெட்ரோரெயில் பணிகளுக்காக ராட்சத கிரேன்கள் மற்றும் ராட்சத எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சுரங்கம் தோண்டும் பணிகளில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் 2026-ல் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டால், வட சென்னையில் இருப்பவர்கள் தென் சென்னைக்கும், தென் சென்னையில் இருப்பவர்கள் வட சென்னைக்கும், போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும்.
    Next Story
    ×