என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
காட்டுப்புத்தூர் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
காட்டுப்புத்தூர் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
காட்டுப்புத்தூர்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள காடுவெட்டி மேல வழிகாடு கிராமத்தை சேர்ந்தவர் அவிநாசி. இவரது மகன் பெரியசாமி (வயது 22). கட்டிட தொழிலாளியான இவருக்கும், பெரிய நாச்சிபட்ட கிராமத்தை சேர்ந்த சின்னராசு மகள் வினோதினி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் நேற்று வினோதினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொண்டார். இதனை கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தோட்டத்தில் இருந்த பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வீட்டுக்கு விரைந்து வந்த பெரியசாமி மனைவியின் நிலையை பார்த்து, தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோதினியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக என தெரிவித்தார்.
அதன்பின் பெரியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணம் முடிந்து 3 மாதமே ஆவதால் முசிறி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காடுவெட்டி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story