search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு
    X
    அமைச்சர் சேகர்பாபு

    கீழ்ப்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

    இந்து சமய அறநிலையத்துறை கணக்கின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகிறார்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பல இடங்களில் உள்ளது. இந்த நிலங்கள் தனியார் மற்றும் அறக்கட்டளைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த நிலங்களை அமைச்சர் சேகர் பாபு மீட்டு வருகிறார். கீழ்ப்பாக்கத்தில் பல இடங்களில் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு நிலம் மீட்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர் பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.

    ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டபிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தனியார் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை கோவில்களுக்கு சொந்தமான ரூ.1000 கோடிக்கும் மேலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்து சமய அறநிலையத்துறை கணக்கின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்படும்.

    கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதில் தீவிரமாக ஈடுபடுவோம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் கீழ்ப்பாக்கத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    ஒரு அறக்கட்டளை நடத்திய பள்ளிக்கூடத்தை மீட்டுள்ளோம். அவர்கள் கோடிக்கணக்கில் வாடகை பாக்கி வைத்திருக்கிறார்கள். இன்று 49 கிரவுண்டு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி இருக்கும். இன்னும் 2 ஆக்கிரமிப்புகள் உள்ளது. 2 மாதங்களில் 60 கிரவுண்டு நிலம் சட்டப்படி கைப்பற்றப்படும்.

    சென்னையை தொடர்ந்து மாவட்ட அளவிலும் தினமும் கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பலர் கோவில் நிலத்தை வாடகைக்கு எடுத்து வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள். இன்னும் சிலர் அதை மேல் வாடகைக்கு விட்டு வருகிறார்கள். அதுபோன்ற சொத்துக்களை கைப்பற்றி வருகிறோம்.

    ஆண்டுக்கணக்கில் வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும் கோவில் நிலங்களை மீட்டு வருகிறோம். சிலர் புதிதாக கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதையும் முறியடித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×