என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவலாஞ்சியில் இருந்து லக்கிடி காட்சி முனைக்கு செல்லும் சாலை மண் மூடி இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அவலாஞ்சியில் இருந்து லக்கிடி காட்சி முனைக்கு செல்லும் சாலை மண் மூடி இருப்பதை படத்தில் காணலாம்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சி வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    2 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சி வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி நிலச்சரிவு பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி வனக்கோட்டம் அவலாஞ்சி வனப்பகுதியில் சூழல் சுற்றுலா உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் எழில்மிகுந்த மலை முகடுகள், சிறுத்தை, புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் மற்றும் அரிய வகை பறவைகளை பார்வையிடலாம். காலிபிளவர் போன்று மூடி மறைந்து காணப்படும் மலைப்பகுதி பிரமிக்க வைக்கிறது. மலை உச்சியில் பவானி அம்மன் கோவில் உள்ளது. லக்கிடி காட்சி முனையில் இருந்து இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். அடர்ந்த காடுகள் வழியாக சுற்றுலா செல்வது மனதில் ஒருவித திகிலுடன் கூடிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

    இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரே நாளில் அவலாஞ்சியில் 90 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அவலாஞ்சியில் இருந்து லக்கிடி காட்சிமுனை செல்லும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் சாலையே தெரி யாத அளவுக்கு மண் மூடியது. பல இடங்கள் சாலை பெயர்ந்த நிலையில் காடுகளாக காட்சி அளிக்கிறது. இதனால் அவலாஞ்சி சூழல் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

    கொரோனா ஊரடங்கை தளர்வை தொடர்ந்து அவலாஞ்சி வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆண்டு களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். சோதனைச்சாவடியில் இருந்து வனத்துறை விருந்தினர் மாளிகை வரை மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்த ரூ.30, நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அவலாஞ்சி அணை, வனவிலங்குகள் மற்றும் நர்சரியில் உள்ள ஆர்கிட் செடிகளை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, அவலாஞ்சியில் சிறிது தூரம் செல்ல மட்டும் அனுமதி உள்ளது. இதனால் முழுமையாக கண்டு ரசிக்க இயல வில்லை. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து சீரமைக்க வேண்டும். மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு முழுமையாக அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×