search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    மாணவர்கள் நலன் கருதி தனி கல்வி வாரியம்- புதுச்சேரி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

    மாணவர்கள் நலன் கருதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. இதனால், புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க கோரி ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த மனுவில், குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு என தனி பாட திட்டத்தை வகுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, "புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலன் கருதியும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என்று தனி கல்வி வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.

    எனவே, இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை செயலாளருக்கு 4 வாரங்களில் புதிய கோரிக்கை மனுவை மனுதாரர் அளிக்க வேண்டும். யூனியன் பிரதேசத்தில் அதிகரித்துள்ள பள்ளிகள் எண்ணிக்கை, தனிப்பட்ட பாட திட்டம் வழங்குவதின் தேவை ஆகியவற்றை பரிசீலித்து, 12 வாரங்களில் தகுந்த முடிவை மனுதாரருக்கு கல்வி துறை செயலாளர் தெரிவிக்க வேண்டும்.

    மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு, விரைந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×