என் மலர்
செய்திகள்

மரணம்
லாரியில் தூங்கிய டிரைவர் கீழே விழுந்து பலி
லாரியில் தூங்கிய டிரைவர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
தஞ்சை மாவட்டம் வெண்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ராஜசேகர்(வயது 36). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜசேகர், லாரியில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இயங்கி வரும் ஒரு தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து சுண்ணாம்பு கற்களை இறக்கிய பின்னர், ராஜசேகர் லாரியில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது அவர் லாரியில் இருந்து கீழே விழுந்ததில், நெற்றியில் அடிபட்டு கிடந்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






