என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
அணுகுபாதை பிரச்சினை-அவினாசியில் போலீஸ் நிலையம் கட்டுவதில் சிக்கல்
பேரூராட்சி நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. பேரூராட்சி வணிக வளாகம் வந்து செல்லும் மக்களுக்கு ‘பார்க்கிங்’ வசதி கிடைக்காது என்று கூறி அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவிநாசி:
அவிநாசி பழைய பஸ் நிலையம் பகுதியில் செயல்படும் போலீஸ் நிலையம் வளாகத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர், போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் அனைத்தும் செயல்படுவதால் இட நெருக்கடி உள்ளது.
இந்தநிலையில் போலீஸ் நிலையத்திற்கு பின் காவல்துறைக்கு சொந்தமான 20 சென்ட் நிலம் காலியாக உள்ளது.
அங்கு அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம், அவிநாசி மடத்துப்பாளையம் சாலையில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் மதுவிலக்குப்பிரிவு போலீஸ் நிலையம் ஆகியவற்றை அங்கு கட்ட நிதி ஒதுக்கி அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த போலீஸ் நிலையங்களுக்கு அணுகுபாதையாக 20 அடி அகலம், 10 அடி நீளத்துக்கு பேரூராட்சி நிலம் தேவைப்படுகிறது. இதற்கு காவல்துறையினர் அனுமதி கோரினர். பேரூராட்சி நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது.
பேரூராட்சி வணிக வளாகம் வந்து செல்லும் மக்களுக்கு ‘பார்க்கிங்’ வசதி கிடைக்காது என்று கூறி அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து டி.எஸ்.பி.. பாஸ்கரன் தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு, அணுகுபாதைக்கு அனுமதி பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் எதிர்ப்பு தொடர்வதால் திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டி.எஸ்.பி., கூறுகையில், “போலீஸ் நிலையம் கட்டிடம் கட்ட அணுகுபாதையை தேர்வு செய்வது உறுதி செய்யப்பட்டு விட்டால் அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்துவிடும் என்றார்.
Next Story