search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தங்களது சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து இலவசமாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

    2021-22-ம் கல்வியாண்டிற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாமாண்டு முழு நேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணிப்பொறியியல் துறை போன்ற பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக 20ம்தேதி முதல் வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு இப்பயிலகத்திலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது https://www.tngptc.com மற்றும் https://www.tngptc.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும்.

    எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தங்களது சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து இலவசமாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ சான்றிதழ், சாதிசான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில்பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் (ஏதாவது ஒன்று) மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவு பாடங்கள் (எழுத்து முறை மற்றும் செய்முறை) அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பயிற்சியில் உரிய தொழில் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு மூலமாக சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இக்கல்லூரியில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச கல்விக்கட்டணம் மட்டும் பெறப்படும். பனிரெண்டாம் வகுப்பு - ரூ.2 ஆயிரத்து 194, தொழிற்கல்வி ரூ.2 ஆயிரத்து 200 கட்டணமாக செலுத்த வேண்டும். அரசு விடுதி வசதி, இலவச பஸ் பாஸ், கல்வி உதவிதொகை போன்ற சலுகைகள் உள்ளது.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டமாண்டு சேர்ந்து கல்வி பயிலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×