search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்குகள்
    X
    குரங்குகள்

    வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி இல்லாததால் தவிக்கும் வனவிலங்குகள்

    வறட்சி காலங்களில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுக்கின்றன.
    காங்கேயம்:

    காங்கேயம் அருகே  தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது ஊதியூர் மலை. பிரசித்தி பெற்ற இந்த மலையானது 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகும். மலையில் பலநூற்றுக்கணக்கான குரங்குகள், மான்கள், உடும்பு, கீரி, முயல், முள்ளம்பன்றி, நரி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    மழைக்காலங்களில் மலையில் ஆங்காங்கே தண்ணீர் குடித்து தாகம் தணிக்கும் இந்த விலங்குகள் வறட்சி காலங்களில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுக்கின்றன.

    குறிப்பாக ஊதியூர் - குண்டடம் சாலையில் உள்ள தனியார் கோழிப்பண்ணை அருகே சாலையை கடந்து செல்லும் குரங்குகள் விவசாய தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் காய்களை பறித்து தின்றும், அங்குள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்தும் வருகின்றன.

    இவ்வாறே அவ்வப்போது மான்களும் அடிவாரப்பகுதிக்கு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த 2 மான்களை நாய்கள் விரட்டி கடித்துக் கொன்றுவிட்டதாகவும், கோழிப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற 2 குரங்குகள்  வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதியில் ஆங்காங்கே வன விலங்குகள் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டிகளை அமைத்து குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அவற்றில் தண்ணீர் நிரப்பி வந்தால் வனவிலங்குகள் அடிவாரப்பகுதிகளுக்கு வருவது தடுக்கப்பட்டு உயிரிழப்புகள் நடைபெறாது.

    எனவே தண்ணீர் தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊதியூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×