search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்ற 214 பேர் கைது

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 214 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 53 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடிப்பார்வையில் போலீசார் மதுவிலக்கு தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், கடந்த 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதில் சம்பந்தப்பட்ட 214 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டு மதுபானங்கள் 1,311 பாட்டில்களும், கர்நாடக மதுபானங்கள் 6 ஆயிரத்து 310 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் 122 லிட்டர் சாராயம், 3 ஆயிரத்து 350 லிட்டர் சாராய ஊறல், 250 லிட்டர் கள் ஆகியவைகளும் மற்றும் ரூ.40 ஆயிரத்து 870 பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக மேலும் 36 இருசக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு லாரி என மொத்தம் 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட உள்ளன.

    கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தெரிந்தால் 96558 88100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×