search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூர் கம்மியம்பேட்டையில் இருதரப்பினர் கத்தியுடன் மோதல் - 7 பேர் கைது

    கடலூர் கம்மியம்பேட்டையில் இரு தரப்பினர் கத்தியுடன் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் கர்ணன் மகன் நாய்க்குட்டி என்கிற விஜயகுமார் (வயது 23). இவர் நேற்று மாலை கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரில் உள்ள அய்யனார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் பாலா என்கிற பாலமுருகன் (21) என்பவர் அங்கு நின்று கொண்டிருந்தார். இவரை விஜயகுமார், முன்விரோதம் காரணமாக முறைத்தபடி சென்றதாக தெரிகிறது. இதை கவனித்த பாலமுருகன் அவரை தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் தங்களது நண்பர்களை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி கத்தியுடன் மோதிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் அடிப்படையில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் விஜயகுமார், மார்க்கெட் காலனியை சேர்ந்த ராமு மகன் விஜய், 17 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பாலமுருகன், கம்மியம்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் மகன் கருப்பு என்கிற கண்ணன் (24), பழனிவேல் மகன் வீரமணி (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் கத்தியுடன் மோதிக்கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×