என் மலர்
செய்திகள்

கொடுமுடி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவி மர்ம மரணம்- போலீசார் விசாரணை
கொடுமுடி:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வேலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சீரங்கன். இவரது மகள் சிவகாமி (வயது 41). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டாம் பரப்பை சேர்ந்த பரணீஸ்வரன் என்பவருக்கும் சிவகாமிக்கும் திருமணம் நடந்தது.
பரணீஸ்வரன் திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சிவானிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரணீஸ்வரன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு தனி அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். இரவில் சிவகாமி கழிவறைக்கு சென்றார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதையடுத்து மாமியார் கழிவறைக்கு சென்று பார்த்தார். அப்போது சிவகாமி வாயிலும், காதிலும் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் நள்ளிரவில் சிவகாமியின் தந்தைக்கு போன் செய்து உங்கள் மகள் இறந்து விட்டார் என கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவகாமியின் தந்தை சீரங்கன் புறப்பட்டு வெள்ளோட்டாம் பரப்பில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு காது, வாயில் ரத்தம் கசிந்த படி சிவகாமி கட்டிலில் படுத்த நிலையில் இறந்து கிடந்தார்.
குறித்து சீரங்கன் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளார்.
அதன் பேரில் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவகாமியின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாமி எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜ், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதின் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிவகாமியின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.






