என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - புதிதாக 591 பேருக்கு தொற்று உறுதி

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 591 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 591 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

    இவர்களில் பெங்களூரு, கேரளா, ஒடிசா, சென்னை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து குமராட்சி, மங்களூர், கடலூர், அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நல்லூர் ஆகிய இடங்களுக்கு வந்த 13 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள காட்டுமன்னார்கோவில், நல்லூர், குமராட்சி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய இடங்களை சேர்ந்த 6 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

    இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 124 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 448 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 453 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றிருந்தனர்.நேற்று 97 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 400 பேர் பலியாகியிருந்தனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

    இதன் விவரம் வருமாறு:-

    விருத்தாசலத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த 70 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் அங்குள்ள அரசு மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    அவர்களுக்கு உமிழ்நீர் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 403 ஆக உயர்ந்தது. கொரோனோ பாதித்த 4,528 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 953 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி 69 ஆக உயர்ந்தது.
    Next Story
    ×