என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே சாம்பிராணி கம்பெனியில் தீவிபத்து
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் சாம்பிராணி, ஊதுபத்தி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார்.
இந்த கம்பெனியில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் கம்பெனியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீப்பற்றி எரிந்த சாம்பிராணி, ஊதுபத்தி கம்பெனியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் அந்த கம்பெனியில் இருந்த ஊதுபத்தி தயாரிக்க தேவையான பொருட்கள், சிறு எந்திரங்கள் உள்பட அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






