என் மலர்
செய்திகள்

பல்லடத்தில் 10 லட்சம் கறிக்கோழிகள் தேக்கம்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு நாளை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் கறிக்கோழி நுகர்வு குறைந்து விட்டது. ஏற்கனவே “ஆர்டர்” கொடுத்த வியாபாரிகளும் கொடுத்த ஆர்டரில் பாதி அனுப்பினால் போதும் என கூறிவிட்டனர்.
இதன் காரணமாக கறிக்கோழி விலை தற்போது படிப்படியாக குறைந்து விட்டது. கடந்த 13-ந்தேதி 123 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை இன்று ரூ.78 ஆக குறைந்தது. கறிக்கோழிகள் உற்பத்திக்கு கிலோ ரூ.75 முதல் ரூ. 78 வரை செலவாகும் நிலையில் இந்த விலை குறைவினால் கறிக்கோழி பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். விற்பனையாகாமல் 10 லட்சம் கறிக்கோழிகள் பல்லடத்தில் தேக்கமடைந்துள்ளன.






