search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் வாக்கு பெட்டி
    X
    தபால் வாக்கு பெட்டி

    தபால் ஓட்டுகளை பிரிக்க பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தபால் ஓட்டுகளை பிரிக்க பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
    காரைக்குடி:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே மாதம் 2-ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையொட்டி தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் மே மாதம் 2-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி தற்போது அங்கு மின்னணு வாக்கு பெட்டி வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அமரும் இடம் என பிரிக்கப்பட்டு அதன் நடுவில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கும் அறையின் ஜன்னல்கள், கதவுகளில் காற்று புகாத வண்ணம் சுற்றிலும் பலகை வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் வைப்பதற்காக வரிசையாக கட்டம் வரையப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் ஓட்டுகள் பிரித்து வைப்பதற்காக பலகையில் பெட்டிகள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன்ரெட்டி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், வருவாய்த்துறையினர் நேரடியாக கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×