search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடத்தை காணலாம்.
    X
    வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடத்தை காணலாம்.

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஊழியர் பலி

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரத்தில் பெத்து செட்டியபட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    இந்த ஆலை மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் பெற்றது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றது. மருந்து கலக்கும் அறையில் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30) என்ற ஊழியர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென மருந்து கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் இருந்த ஊழியர் சங்கரலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மற்ற அறைகளில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருதுநகர் தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த சங்கரலிங்கத்தின் உடலை மீட்டனர்.

    வெடிவிபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறை கோட்ட அதிகாரி கணேசன் விசாரணை நடத்தினார். அதேபோல போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×