search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    ஈரோட்டில் ஒரு வாரத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.4¼ லட்சம் அபராதம் விதிப்பு

    ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.4¼ லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது முக கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் ஆகிய இடங்களிலும், முக்கிய சாலையான பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, திருநகர்காலனி, கருங்கல்பாளையம், பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் மூலமாக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அப்போது முக கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்தில் முக கவசம் அணியாத 1,600 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், முக கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறையை கடைபிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் 20 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×