search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சத்தி, அந்தியூரில் பறக்கும் படை வாகன சோதனை - உரிய ஆவணங்கள் இல்லாததால் 2 பேரிடம் ரூ.6½ லட்சம் பறிமுதல்

    சத்தியமங்கலம், அந்தியூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 2பேரிடம் இருந்து ரூ.6லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தன பிரனேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ.5லட்சத்து 50 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வேனில் வந்தவர் திண்டுக்கல் மாவட்டம் மலையான் மல்லியை சேர்ந்த சின்னசாமி (22) என்பதும், மங்களூரில் கோழிகளை விற்றுவிட்டு அதற்கான பணத்தை உரிய ஆவணமின்றி அவர் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர், உதவி அலுவலர் ரவி சங்கர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதேபோல் அந்தியூர் அருகே உள்ள தோப்பூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிதாஸ் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அத்தாணியில் இருந்து அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.91 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் அந்தியூர் குப்பாண்டபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அருண்குமார் (வயது 40) என்பதும், வியாபாரியான அவர் சர்க்கரை வாங்குவதற்காக சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டிக்கு உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அப்போது அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும் வருவாய் ஆய்வாளர் உமா ஆகியோர் இருந்தனர்.
    Next Story
    ×