என் மலர்
செய்திகள்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்றதை படத்தில் காணலாம்.
100 சதவீத வாக்குப்பதிவிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டு்ம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமெண்ட்ஸ் வளாகத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய வரைபட வடிவில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நின்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
வருகிற தேர்தலில் வாக்காளர்கள் குழப்பமின்றி தெளிவாக வாக்களிக்கும் வகையில், மாதிரி வாக்குபதிவு மையம் அமைக்கப்பட்டு, மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எனவே வாக்களிப்பதின் அவசியத்தை உணர்ந்து 18 வயது நிரம்பிய அனைவரும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்து வலுவான ஜனநாயகம் உருவாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய வரைபட வடிவில் தொழிலாளர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ், ராம்கோ சிமெண்ட்ஸ் முதுநிலை துணைத்தலைவர் ராமலிங்கம், ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் உள்பட ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






