search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலையை போட்டு மல்லுக்கட்டினாலும் சிக்காமல் சீறிப்பாயும் காளை.
    X
    மாலையை போட்டு மல்லுக்கட்டினாலும் சிக்காமல் சீறிப்பாயும் காளை.

    வ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டு

    வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டி நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை வட்டார மருத்துவர் ஜெயராமன் தலைமையில் செய்யப்பட்டது.

    200 காளைகளும், 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு சப்-கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை சப்-கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், சந்திரபிரபா எம்.எல்.ஏ., வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்து முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நிலவள வங்கி தலைவர் முத்தையா, தாசில்தார் அன்னம்மாள் உள்பட பலர் பார்வையிட்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.

    விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த ஜல்லிக்கட்டில், வீரர்களை சிதறடித்த காளைகளுக்கும், சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டியில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை வ.புதுப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×