search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி
    X
    திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி

    புதுச்சேரியில் முக்கிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி

    புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-ந்தேதி புதுவைக்கு வந்து, பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று புதுவை வந்தார். டெல்லியில் இருந்து காலையில் விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டரில் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து, கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்கு பிரதமர் வந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

    விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை (புதுவையின் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய திட்டம்), சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 

    காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்ட புதிய ரத்த வங்கி, இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் ரூ.18.30 கோடியில் மகளிர் விடுதி, கடற்கரையில் ரூ.14.23 கோடியில் கட்டப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைத்தார்.

    பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×