search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    நாராயணசாமியின் ராஜினாமா ஏற்பு- ஜனாதிபதி ஆட்சி குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

    புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் சமநிலையில் இருந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்- அமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

    இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் புதுவையில் கடந்த 2 வாரமாக இருந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) ஜிப்மர் கிளை கட்டிடம் திறப்பு, பா.ஜ.க. பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறார்.

    இங்கிருந்து அவர் டெல்லிக்கு சென்றதும் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×