என் மலர்
செய்திகள்

பென்னாத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடும் காளையை படத்தில் காணலாம்.
பென்னாத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி
வேலூர் அருகே பென்னாத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்கம்பாறை:
வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள பென்னாத்தூர் ஆதிதிராவிடர் காலனியில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதனையொட்டி காளைகள் ஓடும் விடுதியில் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. காளைகள் ஓடும் சாலையின் நடுவே தேங்காய் நார் மற்றும் மணல் போடப்பட்டிருந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 215 காளைகள் இதில் பங்கேற்றன.
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வேலூர் தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன், பெண்ணாத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் வரவேற்றார்.
காலை 8 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கியதும் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது அவை சீறிப்பாய்ந்து ஓடின. அவற்றை இருபுறமும் வேடிக்கை பார்க்க திரண்டிருந்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் இளைஞர்கள் கூட்டமாக நின்று காளைகளை வழிமறித்ததால் அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது இளைஞர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் 2 மணி ஆன பின்பும், மாடுகள் விடப்பட்டதால் போலீசார் விழாவை தடுத்து நிறுத்தினர். இதனால் 50-க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் மாடுகளை விட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நிகழ்ச்சியின்போது காளைகள் முட்டியதில் 19 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதேபோல் மேல்வல்லம் கிராமத்திலும் எருதுவிடும் விழா நடந்தது.
Next Story






